Tuesday, March 25, 2014

இது ஒரு அழகிய நிலாக்காலம்!

சில மாதங்களாக வலியையே எழுதியதால் ஏதோ நான் வலியில் உழன்று, சொல்லொணாத்துயரில் தவிப்பதாய் ஒரு பதற்றம் என் அன்பு வட்டத்தில்! நிச்சயமாய் வலியற்ற வாழ்வில்லை எனக்கு - வலியென்ற சொல்லின் இருபொருளும் உண்டெனக்கு! வலி தந்த வலிமையும், இதம் தந்த இனிமையும் சேர்ந்ததே வாழ்வு! என் வழியும் ஒன்றும் விலக்கில்லை இந்த விதிக்கு!

அன்பைப் பொழியும் பெற்றோர்! எதையும் எதிர்பாராமல் அன்புசெலுத்தும் உற்றார்! தவித்து நிற்கும்போது தாங்கிப்பிடிக்க நண்பர்களும், சுற்றமும்! கற்றதைவெளிக்காட்டவும், மேலும் கற்கவும் வாய்ப்புள்ள வேலை! கரும்பு தின்னக் கூலியாக, தேவைக்குப் பணம் - சொல்லப்போனால் தேவைக்கு அதிகமாகவே பணம்! உணவு, உடை, உறையுள் அனைத்தும் விரும்பிய வண்ணம்! உலக இயக்கம் குறித்துப்  பேசவும் நண்பருண்டு, வெறும் கதை பேசவும் நண்பருண்டு! தவறுகளைச்சுட்டிக்காட்டி இடித்துரைக்கவும், திட்டங்களுக்கு உரைகல்லாகவும் இருக்கும் நட்புண்டு! நட்போடு இருக்கும் சுற்றமும்,சுற்றம் போலக்காக்கும் நட்பும் சூழ்ந்த வாழ்வு எனது! ஓய்விலாப்பணிகளுக்கிடையிலும் கற்றுத்தரவும், மனச்சுமை தீர்க்கவும், மிக ரசித்த விஷயங்களைப் பரிமாறவும் நேரம் ஒதுக்கும் சுற்றமும் நட்பும் உண்டு!

கல்வியும், வாழ்வும் கற்றுத்தந்த ஆசிரியர்(யை)களுடன் நினைத்தால் இன்றும் பேசுவதற்கு வாய்ப்புண்டு! கற்றுத்தரத் தயாராக இருக்கும் ஆசிரியர்களைப் புதிதாய் பெறுவதற்கும் சந்திப்பதற்கும் வாய்ப்புண்டு! பாரதியைப் போன்ற, வள்ளுவர் போன்ற மானசீக குருமாரை தினம் சந்திக்கும் இணையமும் இதயமும் உண்டுஎன் பள்ளிப்பருவத்தில், கடையம் என்னும் சிற்றூரில்பாரதி நடந்த வீதிகளில் நான் உலவிய நினைவுண்டு! பாரதி குடியிருந்த வீட்டை, பாரதி அமர்ந்த பாறையை, அவர் கால் நனைத்த நதியை, அவர் பெயர் கொண்ட பள்ளியை, கல்லூரியைச் சுற்றித்திரிந்த தித்திப்புண்டு மனத்துள்!

பாரதி சொல்வது போல் இவ்வுலகம் இனியது இதிலுள்ள வான் இனிமையுடைத்து; காற்றும் இனிது.தீ இனிது. நீர் இனிது. நிலம் இனிது

இவை தாண்டி வேறென்ன வேண்டும் வாழ்வு இனிக்க!

Friday, March 14, 2014

மீண்டும் வலி!

முதல் கட்டுரை எழுதி இரண்டு மாதங்களான பின்னும், வலி குறித்த விவாதம் இன்னும் என்னை விடுவதாயில்லை! எத்தனை பேர் வலியுடன் அல்லது வலி குறித்த சிந்தனையுடன் என்பதற்கு இது சான்று போலும்!

மனிதர்கள் வலியை மூன்று விதமாகக்  கையாளுவதாகப்படுகிறது!

1. வலி கண்டு துவண்டுபோய் விரக்தியுற்று தவறான முடிவெடுப்போர் / விரக்தியால் செயலிழப்போர். மிகவும் சாதரணமானவர்கள் இவர்கள்.

2. வலியைச் சமாளித்து வாழ்வை இயல்பாகத் தொடருவோர். தைரியமானவர்கள் இவர்கள். வலி தாங்குவதின் இரண்டாம் நிலை இது...

3. தன் வலியைச் சமாளிப்பதுடன், உலகின் வலியையும் தீர்க்கத்துணிவோர். வலியைக் கிரியா ஊக்கியாகப்பயன்படுத்துபவர்கள் இவர்கள்.உலகம் இயங்குவது இவர்கள் போன்றவர்களால்தான்! வாமனராய் அவதரித்த இவர்கள் தன் வலியோ, பிறர் வலியோ தந்த உந்துதலில் உலகளக்கும்வண்ணம் விஸ்வரூபம் எடுக்கிறார்கள்!


காந்தி என்றொருவர் உருவாகக் காரணமாயிருந்தது ஒரு வலி என்றால் அமிலவீச்சுக்குள்ளாகும் பெண்களின் துயர் துடைக்க எழுந்து நிற்கும் லக்ஷ்மி உருவாகக் காரணமாயிருந்தது இன்னொரு வலி! அமிலவீச்சில் முகம் கருகியபின்னும், முடங்கிப் போகாமல், அறுவை சிகிச்சையால் அழகை மீட்டெடுக்க முயற்சியெடுக்காமல், தன்னைப் போல வலியில் தவிக்கும் பெண்களுக்கு உதவ தொண்டு நிறுவனம் தொடங்கிய லக்ஷ்மியின் வலிமையை என்னவென்று சொல்வது! வலி வலிமையைத் தரும் என்பதற்கு இது நல்ல உதாரணமன்றோ நண்பரே!

Tuesday, March 4, 2014

How do you survive…..

There was a serious discussion between two of my acquaintances last week on whether Chennai is better than  Bangalore or vice versa. The argument escalated to a point where one of them asked "how do you even survive this place?!?!" I have been thinking about this sort of questions for the past few months or so - what makes a place better livable than the other. 

Whenever such a survey is conducted by magazines or any organizations, they consider climate, basic amenities, accessibility and transportation etc. The more and more I think about it, I am wondering if only these parameters decide your preference for one place over the other. All these may have an influence! But primary factors are who all do you have in a city / village and what memory do  you carry about a place - that make it more livable or otherwise.

In early February I traveled to Tirunelveli by train. There was a young family traveling from Kashmir to Kanyakumari. We all know how Kashmir is struggling to get out of gun shots! But during our chat, the young lady - mother of two beautiful kids - said gun shots are a daily affair but she loves Kashmir and can never imagine leaving the place for ever!

Another friend of mine - a middle aged man - from a Mediterranean country that is torn by bomb shells every day, exclaimed that he misses his village and given a chance he would like to go back to the little village

Every village, every city in this world is beautiful and has its own nice things. Your filters let only the good things in when you have other reasons to love the place; and when you do not have any other reasons to like a place, if you have reasons to feel bad, your filters work other way around! Only when you are neutral, you can observe without any color glasses and that is very rare! 

Sunday, February 23, 2014

மாணவப்பருவம்

இந்த வார விகடனில் மறைந்த இயக்குநர் திரு பாலுமகேந்திரா அவர்கள் 90களில் எழுதிய ஒரு கட்டுரை பிரசுரமாகியிருந்தது. அவர் 12 வயதில் 20 வயது ஆசிரியையை காதலித்ததாக எழுதியிருந்தார்!! இது எனக்கு மிகுந்த வியப்பை அளிக்கிறது. அவர் மட்டுமல்ல எத்தனையோ இயக்குநர்கள், எழுத்தாளர்கள், எனது நண்பர்கள் சிலர் இத்தகைய உணர்வு குறித்து எழுதியும் பேசியும் வந்திருக்கிறார்கள். எனவே எனது வியப்புக்கு காரணம் முதல் முறையாகக்கேட்பது அல்ல - பல முறை, பல ஆண்கள் இதைப் பேசியிருப்பதும், எந்த பெண் பிரபலமும்  தனக்குப் பாடம் கற்பித்த ஆசிரியரிடம் இத்தகைய காதல் ஏற்பட்டாதாகச் சொல்லாததும்தான்!

பெண்கள் தங்கள் உணர்வுகளை மறைக்கிறார்களா அல்லது பெரும்பாலான ஆண்கள் பெண்களைப்பார்க்கும் கண்ணோட்டமே இப்படிதானா! எது காரணம் என்று யோசிக்க யோசிக்க இரண்டாவது காரணம்தான் சரி என்றுபடுகிறது.

எனக்கு 4ம் வகுப்பெடுத்த, அன்பே வடிவான, மாணவர்களிடம் கோபத்தைக் காட்டவே தெரியாத ஆசிரியர் திரு முருகானந்தம் அவர்களை இன்றும் மதிக்கிறேன். என்னுள் இருந்த பேச்சாளியைக் கண்டெடுத்ததில் அவருக்குத்தான் முதலிடம். முதன்முதலாய் என்னை மேடையேற்றிப் பேசவைத்து, ஒரு டம்ளர் பரிசளித்தார். நான் வேலைக்கு வந்து பலகாலம் வரை அந்த டம்ளரை பாதுகாத்து வைத்திருந்தேன். இன்றும் எங்காவது ஒரு பரணில் அந்த டம்ளர் பத்திரமாக இருக்கக்கூடும்! ஆனாலும் என் ஆசிரியரின் மீது காதல் வயப்பட்டாதாக நினைவில்லை எனக்கு! 5ம் வகுப்பாசிரியர் திரு முத்து வடிவேல் அவர்களிடமோ, திரு. திருமலை அவர்களிடமோ மரியாதை தவிர வேறெந்த உணர்வும் ஏற்படவேயில்லை!

கல்லூரிக்காலத்திலும்கூட அப்படித்தான்! நாராயணன் சார் என்றால் அவர் கற்றுக்கொடுத்த "Numerical Methods" பாடம்தானே தவிர வேறொன்றுமில்லை! சரி, அவராவது வயதானவர்! ஆனால் என் வயதொத்த அருண், கதிர்வளவ குமார் போன்ற ஆசிரியர்களும் இருந்தனர் - இவர்கள் மணமானவர்களா இல்லையா என்றுகூட யோசித்த ஞாபகமில்லை! ஆசிரியர் மாணவர் என்ற தொடர்பு தாண்டி நட்பு கூட இருக்கவில்லை!

இத்தனை வருட IT experience-ல், எனது ஆசிரியர்களாக இருந்த, இருக்கின்ற பல ஆண்கள் நண்பர்களாகத்தான் இருக்கிறார்கள்! வேறெந்த மயக்கமும் ஏற்பட்ட நினைவில்லை! சரி போகட்டும், அவர்கள் அனைவரையும் ஆசிரியர் என்ற பிரிவில் வைக்காமல், உடன் பணிபுரிபவர்கள் என்று வைத்து, கணக்கில் எடுக்காமல் விட்டுவிட்டலாம்! இப்போது எனக்கு ஆசிரியராய் இருப்பவர் பேராசிரியர் சுரேஷ். ஆய்வு குறித்தும், அல்லாமலும் பல மணி நேர உரையாடல்கள் இருந்த போதிலும், கல்லூரிக்காலம் போலல்லாமல் பெயர் சொல்லி அழைத்தாலுங்கூட, கூர்ந்த மதிநுட்பம், அகண்ட அறிவு குறித்த மரியாதையுடன், நல்ல நண்பர் என்ற எண்ணமிருக்கிறதேயன்றி பாலுமகேந்திரா கூறுவது போல இன்னபிற உணர்வுகள் எழவில்லை!

நான் ஒரு வித்தியாசமான பிறவி என்று கொள்வதற்கில்லை. எனது தோழிகள் தங்கள் ஆசிரியர்கள் குறித்துப் பேசும்போதும் இதுபோன்ற கருத்தே வெளிபடுகிறது! இந்திய வரைபடம் குறித்த ஞானமளித்த தனது வரலாற்று ஆசிரியரை இன்றும் விழிவிரிய நினைவுகூரும் என் அன்னை முதல் Aerobics ஆசிரியர் நன்றாகச்சொல்லித் தருவார் என்று சொல்லும் 10 வயது ஜெனி வரை யாரும் ஆசிரியர்கள் மீது காதல் கொண்டாதாகத் தெரியவில்லை!

இது ஒரு வேளை ஜீன்களின் செயல்பாடோ என்னவோ! அல்லது, மரியாதை என்றும் அன்பு என்றும் எனது வட்டத்தைச் சேர்ந்த பெண்கள் கூறுவதைத்தான் பாலுமகேந்திரா காதல் என்று தவறாகப்புரிந்து-கொண்டிருக்கிறாரோ தெரியவில்லை!


ஆனாலும், சேரன்களுக்குத்தானே  Autograph கதையிருக்கிறது!

Tuesday, January 7, 2014

வலி

முந்தைய கட்டுரையில் வலி என்னும் சொல் குறித்த எனது கருத்தைப் பதிவுசெய்திருந்தேன். என் நண்பர் ஒருவரிடமிருந்து வெகு வேகமான மறுப்பு வந்தது. வலி தாங்கி வலிமை பெறுவது மல்யுத்த வீரர்களுக்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம்; ஆனால், விபத்தில் அன்புக்குரியவர்களை இழந்த வலி என்ன வலிமை தரும்? விபத்திலோ, நோயாலோ உடல் திறன் இழந்தவரின் வலி என்ன வலிமை தரும் என்ற வாதங்களுடன் மடலொன்று விரைந்து வந்தது அவரிடமிருந்து!
வலி வந்தாலே வலிமை வரும் என்ற பொருள் கொண்டதால் வந்த கருத்து வேறுபாடென்றே இதைக் கருதுகிறேன். வலி தாங்கி, வலியை முறைப்படுத்தும்போதுதான் வலிமை வருகின்றது.

வலியின் வீரியம் எப்போது அதிகம்? நாம் வலியிலிருக்கும்பொழுதா அல்லது பிறர் வலியைப் பார்க்க நேரும்பொழுதா?

சில வருடங்களுக்குமுன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, வலியில் தவிக்க நேரிட்டது. மருத்துவர்களும், செவிலியரும் தம்மால் இயன்ற மருத்துவம் செய்தும் வலி குறைந்தபாடாய் இல்லை; மயக்க மருந்து கொடுக்க இயலாத நிலை வேறு! என் பெற்றோருக்கு இருந்த ஒரே வழி, எனது வலியைப் பார்த்துக்கொண்டிருப்பதுதான். தங்கள் கலக்கத்தை என்னிடமும் காட்ட இயலாமல், என் வலி குறைக்க எதுவும் செய்ய இயலாமல், வெறும் சாட்சியாக நின்று பார்க்க வேண்டிய சூழல். கலங்கும் கண்களை மறைத்துக்கொண்டு, என் தலை வருடி, பிரார்த்தனையுடன் இருப்பது தவிர வேறொன்றும் செய்ய இயலவில்லை.  கையாலாகாமல் பிறர் வலி பார்த்திருத்தல் - உலகின் மிகப்பெரிய வலி இதுதான் என்று நினைக்கிறேன். அதுவும் வலியிலிருப்பவர் அன்புக்குரியவராயின் நம் வலி பன்மடங்காகிறது. 

மேற்குறித்த சம்பவத்திற்குப்பிறகு என் வலி தாங்கும் திறன் அதிகரித்ததாகவே தோன்றுகிறது. ஆனால் என் பெற்றோரோ இன்னும் மென்மையானவராக மாறியது போன்ற ஒரு தோற்றம்! யாருக்கு உடல் நலம் குறைந்தாலும் மௌனமான பிரார்த்தனையுடனிகிறார்கள். வலிமை என்பதற்கு யுத்தம் செய்யத் தயாராயிருப்பது என்றுதான் பொருளா என்ன? சகல உயிர்களிடமும் அன்புடனிருப்பதும் வலிமையின் வெளிப்பாடல்லவா!

வலியைச் சரியாகக்கையாளும்போது வலிமை கூடுகிறது என்பதற்கு, கணவனை இழந்து, நண்பர்களால் வேதனைக்குள்ளான என் தோழியும், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டாலும் PhD செய்துமுடித்த பேராசிரியையும் சிறந்த உதாரணங்களல்லவா!! வலியை மயக்க மருந்தாகக் கருதுவோர் வலிமை அடைவதில்லை! வலியைக் கிரியா ஊக்கியாகக் கொள்வோரே வலிமை பெறுகிறார்கள்! இது மல்யுத்த வீரருக்கும் பொருந்தும் நண்பரே!